இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்துவருவதால் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. 3000 மீனவர்கள் திங்கள்கிழமை மீன் பிடிப்பதை தவிர்த்தனர்.
ராமேசுவரத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நாள் தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் மீன்பிடி தடைக் காலம் முடிவடைந்து மீன்பிடிக்கச் சென்றபோது 4-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு ஒரு விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். மேலும் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதனால் மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை ராமேசுவரத்தில் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. மிகவும் குறைந்த அளவிலான விசைப்படகுகளில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.