ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் கண்மாய், ஊருணிகளில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் பொதுப்பணித்துறை சார்பில் கோவிலன்சாத்தான் கிராமத்திலுள்ள கண்மாய் ரூ.32 லட்சத்திலும், வன்னிக்குடி கண்மாய் ரூ.50 லட்சத்திலும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறை சார்பில் களரி ஊராட்சி கீழசீத்தை ஊருணி, புத்தேந்தல் ஊராட்சியிலுள்ள ஊருணிகளும் புனரமைக்கப்பட்டு வருகின்றன. அப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிவராமகிருஷ்ணன், வட்டாட்சியர்கள் சிக்கந்தர் பபிதா, தமிழ்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமமூர்த்தி, பாண்டி, மங்களேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை உதவி பொறியாளர்கள் ஹேமா, ஜம்புலிங்கம் மற்றும் விவசாய பாசனதாரர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
ரூ.37 கோடியில் சீரமைப்பு: நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையிலும், மழை நீரை வீணாக்காமல் சேமிக்கும் வகையிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடியில் 69 கண்மாய்களில் விவசாய பாசனதாரர் நலச்சங்கங்கள் மூலம் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக ஊராட்சி அளவில் உள்ள 224 சிறுபாசன கண்மாய்கள், 988 ஊருணிகளில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
ஒவ்வொரு சிறு பாசன கண்மாய்க்கும் தலா ரூ. 5 லட்சம் மதிப்பிலும், ஊருணிகள் தலா ரூ.1 லட்சம் மதிப்பிலும் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. அதன்படி ரூ. 21.8 கோடி மதிப்பில் சிறு கண்மாய்,ஊருணிகள் சீரமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.