ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே காதலித்து திருமணம் செய்ய மறுத்த இளைஞர் மீது பெண் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
திருப்புல்லாணி அருகேயுள்ள ஊரைச் சேர்ந்த 21 வயதுப் பெண், அவரது தந்தை இறந்து விட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள வளையல் கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சரத் (20) .
அந்தப் பெண்ணிடம் நெருங்கிப் பழகியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பெண் கர்ப்பமானார். ஆனால், அவரை திருமணம் செய்து கொள்ள சரத் மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, சரத் மீது கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும், அதன் பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் பெண் சார்பில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், நிறைமாத கர்ப்பிணியான அந்தப் பெண் ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் அளித்த பரிந்துரையின் பேரில், கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் சரத் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.