இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 5 மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி பாம்பன் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் இருந்து கச்சத்தீவு பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற கொலம்பஸ் என்வருக்கு சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் வெள்ளிக்கிழமை சிறை பிடித்தனர். அதில் இருந்த கொலம்பஸ் (35), அடைக்கலம் (32), அருள் சகாயம் (55), ஜெயகாந்த் (35), முருகன் (40) ஆகிய 5 மீனவர்களைக் கைது செய்தனர்.
மேலும் படகை பறிமுதல் செய்து மீனவர்களை சிறையில் அடைத்தனர். இலங்கை அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், மீனவர்கள் மற்றும் விசைப்படகை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும் சனிக்கிழமை மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இதனால் பாம்பன் துறைமுகத்தில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த போராட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றுள்ளனர்.