தொண்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் பொதுத்தேர்வு நெருங்கும் நேரத்தில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.
தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் பிளஸ் 1 வகுப்பில் 25 மாணவர்களும் பிளஸ் 2 வகுப்பில் 45 மாணவர்களும் படிக்கின்றனர்.
அதேபோல், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 800-க்கு மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர் இதில், பிளஸ் 1 வகுப்பில் 56 மாணவிகளும் பிளஸ் 2 வகுப்பில் 57 மாணவிகளும் உள்ளனர். இப்பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் இருந்த நிலையில் பல்வேறு போராட்டங்களுக்குப் பின் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் கணினி ஆசிரியர்கள் இரண்டு பள்ளிகளிலும் நியமிக்கப்படவில்லை.
பொதுத்தேர்வுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் கணினி ஆசிரியர் நியமிக்கப்படாததால், தங்களின் கல்வித் தரம் பாதிக்கப்படும் என மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். இதுகுறித்து இந்து மகாசபை தொண்டி நகர தலைவர் ராஜா கூறியது:
கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதால் கணினிப்பாடத் தேர்வில் மாணவ, மாணவிகளின் மதிப்பெண் குறையும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்றார்.