தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் வரும் 15 ஆம் தேதியுடன் நிறைவடைவதையொட்டி கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இந்திய எல்லைக்குள்ளேயே மீன்பிடிக்க வேண்டுமென மீன்வளத் துறை உதவி இயக்குநர் யுவுராஜ் தெரிவித்தார்.
தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 ஆம் தேதி வரையுள்ள 61 நாள்கள் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டது. இந்த தடைக்காலம் வரும் சனிக்கிழமை அதிகாலையுடன் நிறைவடைகிறது. இதையொட்டி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தயாராகி வருகின்றனர்.
இது குறித்து மீன்வளத் துறை உதவி இயக்குநர் யுவராஜ் கூறுகையில்: மீன்பிடித் தடைக்காலம் வரும் 15 ஆம் தேதி நிறைவடைவதை முன்னிட்டு அதிகாலை 6 மணிக்கு ராமேசுவரம், பாம்பன் பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறை மூலம் மீனவர்களுக்கு அனுமதி டோக்கள் வழங்கப்படும். இந்த டோக்கன்களை பெற்றுக் கொண்டு அனைத்து விசைப்படகுகளும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டும் என தெரிவித்தார். மேலும் அரசால் தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதே போன்று இந்திய எல்லையை தாண்டி இலங்கை கடற்பகுதிக்கு செல்லக்கூடாது என மீனவச் சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
தடைக்காலம் முடிவடைந்து மீன்பிடிக்கச் செல்ல ராமேசுவரம், பாம்பன், மண்டபம்,கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட மாவட்டத்தில் 1800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.