ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை அடுத்த வேதாளை ஊராட்சியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
வேதாளை ஊராட்சியில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர். இவர்களுக்கு உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டால் 15 முதல் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மண்டபம் அல்லது உச்சிப்புளி பகுதிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், வேதாளை ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிக இடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார். ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினர் அன்வர்ராஜா முன்னிலை வகித்தார். அமைச்சர் எம்.மணிகண்டன் ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார்.
இவ்விழாவில், சுகாதாரத்துறை துணை இயக்குநர் பா.குமரகுருபரன், துணை இயக்குநர்கள் சாதிக்அலி, ரவிச்சந்திரன், உச்சிப்புளி வட்டார மருத்துவ அலுவலர் ஆர்.கே.சுதேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.