ராமநாதபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 16,969 பேர் பங்கேற்றனர். 356 பேர் தேர்வுக்கு வரவில்லை.
தமிழகம் முழுதும் கடந்த 1 ஆம் தேதி முதல் பிளஸ் 2 தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. கடந்த வாரம் முதல் பிளஸ் 1 தேர்வும் நடந்து வருகிறது. இந்நிலையில், 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு வியாழக்கிழமை தொடங்கியது. தமிழ் தேர்வு எழுத ராமநாதபுரம் மாவட்டத்தில் 17,326 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அவர்களில் 356 பேர் தேர்வுக்கு வரவில்லை. ஆகவே 16,969 பேர் தேர்வு எழுதினர். ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள சதக் தஸ்தகீர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் அமைந்த தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தேர்வை முன்னிட்டு தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.