முதுகுளத்தூர் அருகே வெவ்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்த இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கீழத்தூவல் காவல்நிலைய சரகத்துக்குள்பட்ட சாம்பக்குளம் விலக்கு சாலையில் காவல் சார்பு ஆய்வாளர் முத்துமாணிக்கம் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாம்பக்குளம் கிராமத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் பாக்கியம் (50) என்பவர் இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த சாக்குப்பைகளை போலீஸார் சோதனை செய்தனர்.
இதில் விற்பனைக்காக அனுமதியின்றி 26 மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸார் அவற்றை பறிமுதல் செய்து பாக்கியத்தை கைது செய்தனர்.
அதே போன்று திருவரங்கம்- கொழுந்துறை கண்மாய் பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் முதுகுளத்தூர் டி.எஸ்.பி. ராஜேஷ் தலைமையில் தனிப்படை போலீஸார் அங்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது அலங்கானூர் கிராமத்தைச் சேர்ந்த செய்யது மகன் சதக் அப்துல்லா (38), என்பவர் மறைத்து வைத்திருந்த 26 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கீழத்தூவல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.