குடிநீரின்றி 10 ஆண்டுகளாக அவதி: ராமநாதபுரம் ஆட்சியரிடம் 4 கிராம மக்கள் மனு
குடிநீர் வசதியின்றி 10 ஆண்டுகளாக அவதிப்படுவதாக ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் பகுதியைச் சேர்ந்த 4 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கிராம மக்கள் தங்களது தேவையை நிறைவேற்றக்கோரி தினமும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஆர்.எஸ். மங்களம் ஒன்றியம் குடுப்புலி, பவளக்கனி, கைக்குடி, இளங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனுவுடன் வந்தனர். தங்களது கிராமங்களில் குடிநீர் வசதியின்றி கடந்த 10 ஆண்டுகளாக அவதியுற்று வருவதாகவும், குடிநீரை குடம் ரூ.10-க்கு வாங்குவதாகவும், சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடங்கியிருப்பதால் குடிநீர் குழாய் இணைப்பு பணி மேலும் தாமதமாகும் நிலை உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
மேலும் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களைச் சமரசம் செய்து அனுப்பிவைத்தனர். கோடை காலம் தொடங்கிய நிலையில், கிராமப்புறங்களில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது என அதிகாரிகள் கூறினர்.