கீழக்கரை பேருந்து நிலையத்தில் உயர் மின் கோபுரத்தில் கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து மின் விளக்குகள் எரியததால் இரவு நேரத்தில் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பேருந்து நிலையத்தில் இருந்து நாள் தோறும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து நிலையத்திற்கு ராமநாதபுரம், மதுரை, சென்னை, திருச்சி, தூத்துக்குடி, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில்,பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமின்றி இருக்கும் வகையில் ரூ.7 லட்சம் மதிப்பில் உயர் ஒளித்திறன் கொண்ட 6 விளக்குகள் அமைக்கப்பட்டன. இந்த விளக்குகள் எரியும்போது இரவு நேரத்தில் பேருந்து நிலையம் பகல் போன்று கட்சி அளிக்கும்.
இதனால் பயணிகள் பேருந்து நிலையத்திற்கு அச்சமின்றி சென்று வந்தனர்.
இந்நிலையில், இந்த விளக்குகள் கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து எரியாமல் இருந்து வருகின்றன. இது குறித்து பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு உரிய முறையில் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் இரவு நேரத்தில் பேருந்து நிலையம் இருளில் மூழ்கி உள்ளது.
இதனால் வெளியூர் செல்ல பேருந்து நிலையம் வரும் பெண்கள், குழந்தைகள் மற்றும் இரவு நேரத்தில் வெளியூர்களில் இருந்து கீழக்கரைக்கு வருபவர்கள் அச்சத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே கீழக்கரை பேருந்து நிலையத்தில் உயர் மின் கோபுரத்தில் உள்ள விளக்குகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.