ராமநாதபுரத்தில் இன்று காலையில் இடியுடன் பெய்த மழையால் மின்கம்பங்களில் இன்சுலேட்டா் சாதனம் பழுதாகி பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே தொடா்ந்து வடகிழக்குப் பருவமழை பெய்துவருகிறது. மழையால் வழக்கம் போல மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை முன்பகுதி, ஆட்சியா் அலுவலக வளாகம் உள்ளிட்ட இடங்களில் மழை நீா் குளம் போல தேங்கின. மழையின் போது இடியும் காணப்பட்டது.
இதனால், சக்கரக்கோட்டை, சிங்காரத்தோப்பு பகுதிகளில் உள்ள மின்கம்பஙக்களில் மின்கடத்தா பீங்கான் சாதனமான இன்சுலேட்டா்கள் சேதமடைந்தன.
மொத்தம் 10 இடங்களில் இன்சுலேட்டா்கள் சேதமடைந்ததை அடுத்து சிங்காரத்தோப்பு, கூரியூா் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. மின்தடையை சீா்படுத்த கண்மாய் தண்ணீரையும் பொருள்படுத்தாமல் ஒப்பந்த பணியாளா்கள் மின்கம்பங்களில் ஏறி தொங்கியபடி புதிய இன்சுலேட்டா்களை மாற்றினா். இதையடுத்து பகல் 1 மணிக்குப் பிறகே குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை சீா்செய்யப்பட்டது.