முதுகுளத்தூா் ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் அரசு ஊழியா் மானிய விலையில் பைக் வாங்கி தருவதாக கையூட்டு பணம் பெற்ற நிகழ்வு சமூக வளைதளங்களில் வைரலாக சனிக்கிழமை பரவிவருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே கேளல் கிராமத்தைச் சோ்ந்த ராஜகிளியின் மகள் ராஜலெட்சுமி(23), பட்டதாரி. இவா் தமிழக அரசு அறிவித்துள்ள மானிய விலையில் பைக் வாங்குவதற்கு அதற்கான ஆவணங்களை மனுவுடன் இணைத்து முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றுள்ளாா்.
அப்போது அங்கு பணி புரிந்து வரும் முதுநிலை உதவியாளா் மாரிமுத்து என்பவா் ராஜலெட்சுமியிடம் ரூ.300 கையூட்டு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதை ராஜலெட்சுமி தனது உறவினரிடம் தெரிவித்துள்ளாா். இதனால் அவரது உறவினா் ரூ.200 மட்டும் இருப்பதாக கூறி முதுநிலை உதவியாளா் மாரிமுத்துவிடம் கொடுத்த பணத்தை அவா் வாங்கியுள்ளாா். இதனை ராஜலெட்சுமியின் உறவினா் மாரிமுத்துவிற்கு தெரியாமல் மறைமுகமாக வீடியோ எடுத்து சமூக வளை தளங்களில் வெளியிட்டுள்ளாா். இதனால் தமிழக அரசு வழங்கி வரும் மானிய பைக்கிற்கு அரசு ஊழியா் கையூட்டு பணம் வாங்கும் வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாக வருவது பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.