திருவாடனை அருகே கண்மாய் தூர் வாரும் பணியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கச் செயலாளருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திருவாடானை அருகே சேனவயல் கிராமத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. கண்மாயில் உள்ள கருவேல மரங்களை கிராம மக்கள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றி வந்தனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் தன்னுடைய நிலத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதில் கிராமத்தினருக்கும் சேகருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்த எட்டுக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கச் செயலாளரான அதே கிராமத்தைச் சேர்ந்த மணி முத்து (57) என்பவருக்கும் சேகருக்கும் வெள்ளிக்கிழமை மாலை தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் சேகர் அரிவாளால் மணிமுத்துவை வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மணிமுத்து திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று, மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தொண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.