கமுதி அருகே மணல் திருட்டை தடுக்கச் சென்ற காவலர் மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற ஓட்டுநரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்க முயன்றபோது மண்டலமாணிக்கம் காவல் நிலைய காவலர் ராமநாதன் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி நடந்தது. இதில் அவர் காயத்துடன் தப்பினார். இச்சம்பவம் தொடர்பாக தனிப் படை அமைத்து திருநெல்வேலி மாவட்டத்தில் லாரி ஓட்டுநரையும், உரிமையாளரையும் மண்டலமாணிக்கம் போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே தாழையூத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கருப்பசாமி மகன் முத்துக்குமாரை (36) சார்பு -ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான தனிப்படை போலிஸார் புதன்கிழமை கைது செய்தனர்.