பரமக்குடியில் பாரதிய ஜனதா காட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 69-வது பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பரமக்குடி ஆயிரவைசிய இளைஞர் சங்கம் வெள்ளிவிழா அரங்கில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை சேவை தினமாக கொண்டாடினர். இதன்படி கட்சி கொடியேற்றம், ரத்ததான முகாம், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஆர்.முரளிதரன் தலைமையில் எமனேசுவரம் அலுவலகத்தில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது. நகரில் ஓட்டப்பாலம், காமராஜர் நகர் உள்பட 8 இடங்களில் பா.ஜ.க. கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. இளைஞரணி, விவேகானந்தர் இளைஞர் எழுச்சி மன்றத்தினர் இணைந்து நடத்திய ரத்ததான முகாமிற்கு அக்கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் கே.டி.சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நாகராஜன், மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.குமார், மாநில தொழில்துறை பிரிவு எம்.ஜெயகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி ஆர்.எம்.யுவஆனந்த் வரவேற்றார்.
முகாமில் ராமநாதபுரம் ரத்த வங்கியின் மூலம் 16 பேர் ரத்ததானம் செய்தனர். இதனைத் தொடர்ந்து நகரில் பல்வேறு இடங்களில் பல்வேறு குழுக்களாக மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள், இந்து முன்னணி பொறுப்பாளர்கள், விஸ்வ இந்து பரிசத் நிர்வாகிகள், பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.