ராமேசுவரத்தில் மஹாளய அமாவாசையையொட்டி பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளித் தேரோட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் மஹாயள அமாவாசையையொட்டி பக்தர்கள் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி வழிபட்டனர்.
இந்நிலையில், இரவு 9.30 மணிக்கு விநாயகர், முருகன், பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதன் பின்னர் கிழக்கு ராஜகோபுர வாசலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வெள்ளித் தேரில் பர்வதவர்த்தினி அம்பாள் எழுந்தருளினார். தேர் நான்கு ரத வீதிகளில் வீதி உலா தலைமை குருக்கள் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் கோயில் இளநிலை உதவியாளர் ராமமூர்த்தி, பேஸ்கார் அண்ணாத்துரை மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நவராத்திரி திருவிழா: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா சனிக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
நடப்பாண்டில் நவராத்திரி திருவிழா ராமநாதசுவாமி கோயில் பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சனிக்கிழமை இரவு 8 மணிக்கு காப்பு கட்டுதல் தலைமை குருக்கள் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் இணை ஆணையர் எஸ்.கல்யாணி, கண்காணிப்பாளர்கள் ககாரின்ராஜ், பாலசுப்பிரமணியன், மேலாளர் முருகேசன், இளநிலை பொறியாளர் ராமமூர்த்தி, பேஸ்கார்கள் அண்ணாத்துரை, கமலநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராமநாதசுவாமி பர்வதர்த்தினி அம்பாள் சன்னிதியில் அமைக்கப்பட்டுள்ள நவராத்திரி திருவிழா பந்தலில் நாள் தோறும் அம்பாள் நவராத்திரி திருக்கோலம் சனிக்கிழமை தொடங்கியது. இந்த விழா அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்திருவிழாவில் அம்பாள் நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.