ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக கூட்டணியிலுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் எஸ். நவாஸ் கனிக்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், மண்டபம் ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் ராஜகண்ணப்பன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர், உச்சிப்புளி பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பாஜக ஆட்சியில் 2 கோடி பேருக்கு வேலை தருவதாகக் கூறிய வாக்குறுதி என்னவானது. ஜி.எஸ்.டி.யால் சிறு தொழில்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டன. மத்தியில் பாஜக ஆட்சிக்கும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கும் முடிவு கட்ட இந்த தேர்தலில் அனைவரும் திமுக கூட்டணி கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
திருவாடானை: திருவாடானை பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனிக்கு முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணணப்பன் வாக்கு சேகரித்தார்.
திருவாடானை அருகேயுள்ள திருப்பாலைக்குடி, சோழந்தூர், வடவயல், ஆர்.எஸ் மங்கலம், கைகாட்டி, திருவாடானை, தொண்டி, எஸ்.பி. பட்டினம் ஆகிய பகுதிகளில் ஞாயிற்று கிழமை இரவு அவர் வாக்கு சேகரித்தார். இதில் முன்னாள் அமைச்சர் தென்னவன், ஆர்.எஸ். மங்கலம் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் நல்ல சேதுபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.