கமுதி அருகே கீழமாவிலங்கை கிராமத்தில் தெருக் குழாய் இணைப்பிலிருந்து "டியூப்' வழியாக வீடுகளுக்கு குடிநீர் திருடப்படுவதால், காலிக் குடங்களுடன் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இக்கிராமத்தில், 120-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கிராமத்தின் நடுவே குடிநீர் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் குழாய் இணைப்பிலிருந்து, சாலையின் குறுக்கே "டியூப்' மூலம் வீடுகளுக்கு குடிநீர் திருடப்படுகிறது.
இதனால் குழாயடியில் கிராம மக்கள் குடிநீருக்காக காலிக் குடங்களுடன் காத்திருக்கும் அவலம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தண்ணீர் பற்றாக்குறையால் தத்தளிக்கும் கிராமத்தில் இது போன்று குடிநீர் குழாய் இணைப்பிலிருந்து, திருட்டுத்தனமாக வீட்டிற்கு அமைக்கப்பட்டுள்ள குழாய் இணைப்பை, ஊராட்சி நிர்வாகம் துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.