பரமக்குடி அருகே உள்ள எம்.நெடுங்குளம் கிராமத்தில் குடும்பத் தகராறில் ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 7 பேர் மீது வழக்குப் பதிந்து 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
பரமக்குடி அருகே உள்ள எம்.நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சிவக்குமார் (39). இவரும் அவரது மனைவி அனிதாவும் (36) கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் அனிதாவின் சகோதரியான ராஜேந்திரன் மனைவி சித்ரா, சிவக்குமாரிடம் குடும்பப் பிரச்னை குறித்து பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்குமிடையே வாய்த் தகராறு முற்றியுள்ளது. இதில் அனிதா தரப்பைச் சேர்ந்த ஆனந்தபிரபு, சித்ரா, திலகவதி, வேலு, தங்கமணி ஆகியோர் சேர்ந்து கம்பு மற்றும் அரிவாளால் சிவக்குமாரை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சிவக்குமார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேபோல் காயமடைந்த எதிர் தரப்பைச் சேர்ந்த சித்ரா பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் சிவக்குமாரின் சகோதரர் நாகரத்தினம் அளித்தப் புகாரின் பேரில் போலீஸார் 6 பேர் மீது வழக்குப் பதிந்து அனிதா, வேலு, தங்கமணி ஆகியோரை கைது செய்தனர். அதேபோல் எதிர்தரப்பில் சித்ரா அளித்தப் புகாரின் பேரில் சிவக்குமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.