ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் அரசு நடுநிலைப் பள்ளியில் புதிதாகச் சேர்ந்த 47 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் சின்னப்பாலம் மீனவக் கிராமத்தில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இதே பகுதியில் தனியார் பள்ளிகளும் உள்ள நிலையில், அரசுப் பள்ளியில் 1 முதல் 7 ஆம் வகுப்பு வரை புதிதாக 47 மாணவ, மாணவிகள் சேர்ந்தனர். அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் சேர்ந்துள்ளதை அடுத்து, கல்வித் துறை சார்பில் அப்பள்ளி ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு மற்றும் ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது. இதில், மண்டபம் வட்டாரக் கல்வி அலுவலர் க. ரவிக்குமார் தலைமை வகித்தார்.
முன்னதாக, ஆசிரியர் ஜெ.ஜே. லியோன் வரவேற்றார். ஆசிரியர் பா. சந்திரமதி நன்றி கூறினார்.