ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா அச்சங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மேலிச்செல்வம் மகன் கணேசன் (26). இவரது அம்மா இறந்து விட்ட நிலையில் அப்பா வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு தனியாகச் சென்று விட்டாராம். கணேசன் தனது பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தார்.
சமீப காலமாக ராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் தன் நண்பர்களுடன் அவர் தங்கியிருந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு அறையை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் அறைக்கு வரவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரம் வாலாந்தரவை அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.
கணேசனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்துகொண்ட சோகத்தில் இருந்த கணேசன், மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் கூறுகின்றனர்.