ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மர்ம நபர்கள் தீவைத்ததால் வீடு எரிந்து சேதமடைந்ததாக செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாடானை அருகே பாரதி நகரில் தனியார் மண்டபத்திற்கு பின்புறமாக லட்சுமி (50) என்பவர் தனது மகள் மற்றும் 2 பேரன்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செவ்வாய்க்கிழமை மர்ம நபர்கள், அந்த வீட்டுக்கு தீ வைத்ததில் தீ மளமளவென எரிந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் வந்த தீயணைப்புப் படை வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
காற்றின் வேகம் அதிகரித்ததால் வீடு முழுவதும் எரிந்து, பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்கள், உடைகள், பாத்திரங்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து லட்சுமி, தனது வீட்டிற்கு மர்மநபர்கள் தீவைத்துச் சென்றதாக திருவாடானை காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.