கமுதி அருகே அரியநாச்சியம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கமுதி அருகே கே.வேப்பங்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் கோயிலின் 3-ம் ஆண்டு வருஷாபிஷேசம், மற்றும் ஆடித் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு, பெரிய மாடு, சின்ன மாடு என இரண்டு பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயங்கள் நடைபெற்றன.
இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் வேப்பங்குளத்திலிருந்து கமுதி சாலையின் வழியாக 12 கி.மீ. தொலைவிற்கும், சின்ன மாட்டு வண்டி பந்தயம் அதே கமுதி சாலையில் 10 கி.மீ. தொலைவிற்கும் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது.
பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 7 மாட்டு வண்டிகளும், சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 9 மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. மாட்டு வண்டி பந்தயங்களில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள், பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் முதல் 3 இடங்களை பெற்ற மாட்டு வண்டி, பந்தய வீரர்களுக்கு ரொக்கப் பணம், குத்துவிளக்கு, அண்டா ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன. இந்த மாட்டு வண்டி பந்தயத்தை கமுதி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பார்வையிட்டனர்.