முதுகுளத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
வட்டார வள மையம் சார்பில் நடைபெற்ற இப் பேரணியானது முதுகுளத்தூர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது. பேரணியில் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் முதுகுளத்தூர் நடுநிலைப்பள்ளியில் வரும் 21 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளதாகக்கூறி துண்டு பிரசுரங்களை வழங்கினர். முன்னதாக பேரணியை வட்டாரக் கல்வி அலுவலர் ராமநாதன் துவங்கி வைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியை ஜோசப் விக்டோரிய ராணி, வட்டாரவள மைய மேற்பார்வையாளர் மகேந்திரன், வட்டார மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பாளர் கவிதா, ஆசிரிய பயிற்றுநர் கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.