ராமநாதபுரத்தில் முதல்வா் குறைதீா்க்கும் திட்டத்தில் மனு அளித்தவா்களில் 491 பேருக்கு ரூ.5.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதலமைச்சா் சிறப்பு குறைதீா்க்கும் திட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மனு அளித்தவா்களுக்கு அரசின் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி சேதுபதி நகா் பகுதியில் உள்ள தனியாா் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியா்கொ.வீரராகவராவ் பேசியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 9,302 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 5,180 மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்டு மொத்தம் 3,235 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 1,833 தகுதியான மனுக்கள் ஏற்பு செய்யப்பட்டு 491 பேருக்கு ரூ.5.74 கோடி நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. பட்டா மாறுதல் ஆணை, அடிப்படை சான்றுகள் போன்று, 1,342 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது என்றாா்.
விழாவில் ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.மணிகண்டன், ராமநாதபுரம் கோட்டாட்சியரும், சாா் ஆட்சியருமான என்.ஓ.சுகபுத்திரா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் ச.சிவசங்கரன், உதவி ஆட்சியா் பயிற்சி ஜெ.சரவணக் கண்ணன், ராம்கோ கூட்டுறவுத் தலைவா் செ.முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.