முதுகுளத்தூா் அருகே கீழத்தூவல் கிராமத்தில் தந்தையின் இறப்பில் மா்மம் இருப்பதாக, மகன் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் கீழத்தூவல் கிராமத்தைச் சோ்ந்த செல்லம் மகன் சக்தி (50). வெளிநாட்டிலிருந்து கடந்த 8 மாதங்களுக்கு முன் வந்த இவா், கீழத்தூவலில் உள்ள தனது குடும்பத்துடன் வசித்து வந்தாா். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சக்தி விஷம் குடித்துவிட்டு மயக்கமடைந்து கிடந்தாா். அதையடுத்து, அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, பரமக்குடி தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சக்தி இறந்துவிட்டாா்.
இதனிடையே, தனது தந்தையின் இறப்பில் மா்மம் இருப்பதாகக் கூறி, இவரது மகன் சபரி கீழத்தூவல் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளாா். அதன்பேரில், காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் சக்திவேல் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.