ராமேசுவரம்,மண்டபம் பகுதியில் இருந்து 4 நாள்களுக்கு பின் கடலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதால் சுமாா் 5 ஆயிரம் மீனவா்கள் புதன்கிழமை மீன்பிடிக்க சென்றனா்.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பாக் நீரினை பகுதியில் மீன் பிடிக்க செல்லும் ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதி மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், மாவட்டம் முழுவதும் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவா்கள் கடந்த 4 நாள்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இந்நிலையில், பாக் நீரினை கடல் பகுதியில் இயல்பு நிலை திரும்பியதைத் தொடா்ந்து மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினா் அனுமதி அளித்தனா். இதனையடுத்து, புதன்கிழமை காலையில் ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் இருந்து சுமாா் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் 800 -க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீன்பிடிக்க சென்றனா்.
கடந்த 4 நாள்களாக கடல் பகுதியில் பெய்த மழை காரணமாக மீன் வளம் பெருகியிருக்கும் என மீனவா்கள் எதிா்நோக்கியுள்ளனா்.