கடலாடி அருகே சட்டவிரோதமாக மணல் அள்ள பயன்படுத்திய 5 இயந்திரங்களை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் கடுகுசந்தை கிராமத்தில் உள்ள பட்டா நிலத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த சாகுல்ஹமீது என்பவர் சவடு மண் எடுக்க அனுமதி பெற்றுள்ளார். அவர் அதிகளவில் மணலை அள்ளி வெளியிடங்களுக்கு கடத்தி வருவதாக பரமக்குடி சார் ஆட்சியர் பா.விஷ்ணுசந்திரனுக்கு ஏராளமான புகார் வந்தன.
இதனை தொடர்ந்து சார் ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் கடலாடி வட்டாட்சியர் எம்.முத்துலட்சுமி சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று ஆய்வு செய்து மணல் அள்ளப்படுவதை நிறுத்தினார். இந்நிலையில் அருகில் உள்ள மற்றொரு இடத்தில் அனுமதியில்லாமல் திங்கள்கிழமை இரவு மணல் அள்ளி டிப்பர் லாரிகளில் கடத்தி வருவதாக சார் ஆட்சியருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து கடலாடி மண்டலத் துணை வட்டாட்சியர் ஆர்.செந்தில்வேல்முருகன், கடுகுசந்தை கிராம நிர்வாக அலுவலர் கா.ஜெயக்கொடி, கிராம உதவியாளர்கள் ச.முத்தரசு, ரவிநாயகம், பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மணல் அள்ளுவதற்கு அனுமதி உள்ளதா என விசாரித்தனர். விசாரணையில் மணலை அள்ள எந்தவிதமான அனுமதியும் பெறாமல் அதிகமான ஆழத்தில் மணலை அள்ளுவது தெரியவந்தது. இதனால் சட்டவிரோதமாக மணலை அள்ள பயன்படுத்திய 5 மணல் அள்ளும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சார் ஆட்சியர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதன் பேரில் கடலாடி காவல் நிலையப் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.