ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே தனியார் வங்கி ஊழியர்களிடம் ரூ.1.94 லட்சத்தை பறித்துச் சென்ற 2 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பரமக்குடியைச் சேர்ந்த ராஜகோபால் மகன் ராஜேஷ் (28). குமாரக்குறிச்சியைச் சேர்ந்த முத்துமாரி மகன் மலைமுருகன் (40). இருவரும் தனியார் வங்கியில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இருவரும் வங்கியில் கடன் வாங்கியவர்களிடம் பணத்தை வசூல் செய்து அதை வங்கியில் செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி முதுகுளத்தூரில் வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு சாயல்குடிக்கு இரு சக்கர வாகனத்தில் இருவரும் சென்றனர்.
அப்போது சாயல்குடி அருகே சென்ற போது 2 மர்ம நபர்கள் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்து கத்தியைக் காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த ரூ.1.94 லட்சத்தை பறித்துச் சென்றனர்.
இது குறித்து மலைமுருகன் அளித்தப் புகாரின் பேரில் சாயல்குடி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் கமுதி அருகே மண்டலமாணிக்கம் அருகேயுள்ள காட்டுப்பகுதியில் பணத்தை பறித்துச் சென்றவர்கள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து மாவட்ட சிறப்பு குற்றப்பிரிவு புலனாய்வு துறை சார்பு -ஆய்வாளர் கணேசலிங்க பாண்டியன் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் பதுங்கியிருந்த, கமுதி அருகேயுள்ள பெருமாள் தேவன் பட்டியைச் சேர்ந்த சௌந்தரபாண்டி மகன் சரவணக்குமார்(26), அதே ஊரைச் சேர்ந்த காளிக்குமார்(28) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.