ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பிறப்புசான்றுகளை உடனடியாக வழங்கும் வகையில், கூடுதலாக சுகாதாரப் பிறப்புச் சான்று பதிவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை உள்ளிட்ட10 அரசு மருத்துவமனைகளில் பிறப்புச் சான்றுகள் உடனடியாக வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், அனைத்து வசதிகளுடன் முறைப்படி உடனடியாக பிறப்புச் சான்றுகளை வழங்கும் வசதி வியாழக்கிழமை முதலே செயல்படுத்தப்பட்டது.
அதன்படி, ராமநாதபுரம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் பிறப்புச் சான்று வழங்கும் நிகழ்ச்சியை, மாவட்ட வருவாய் அலுவலர் சி. முத்துமாரி தொடக்கிவைத்தார். மேலும் அவர், 10 அரசு மருத்துவமனைகளிலும் பிறப்புச் சான்று பதிவாளர்கள் 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளதற்கான உத்தரவையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் மற்றும் கூடுதல் மாவட்ட பிறப்பு-இறப்பு பதிவாளர் பி. குமரகுருபரன் உள்பட பலர் பங்கேற்றனர்.