திருவாடானை அருகே உள்ள சின்ன கீரமங்கலத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி திறக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கு வணிக நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள், தனியார் மேல்நிலைப்பள்ளி, தொடக்கப் பள்ளி, தனியார் நூற்பாலைகள், சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. வங்கி பரிவர்த்தனைக்கு சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவாடனை அல்லது சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொண்டிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. வங்கிக்கு கொண்டு செல்லும் பணத்துக்கு பாதுகாப்பு இல்லாததால் தங்கள் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கிளை திறக்க வேண்டுமென்று சம்பந்தப்பட்ட துறையினரிடம் பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கிளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.