ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற வட்டாட்சியரை தாக்கி, செல்லிடப்பேசியை பறிக்க முயன்ற செங்கல் சூளை உரிமையாளரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அபிராமம் அருகே மேலக்கொடுமலூர் பகுதியில் விளைநிலங்களில் மணல் கடத்துவது குறித்து முதுகுளத்தூர் வட்டாட்சியிர் மீனாட்சிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அவர், மேலக்கொடுமலூர் விலக்குச் சாலையில் மணல் கடத்திச் சென்ற லாரியை நிறுத்திச் சோதனையிட்டுள்ளார். அப்போது அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தியது தெரிய வந்துள்ளது.
இதனையறிந்து சம்பவ இடத்துக்கு செங்கல் சூளை உரிமையாளர் மூர்த்தி வந்து தகராறு செய்துள்ளார். இதனால் வட்டாட்சியர் மீனாட்சி உயரதிகாரிகளுக்கு செல்லிடப்பேசியில் தகவல் தெரிவிக்க முயன்றார். அப்போது மூர்த்தி, வட்டாட்சியரை கீழே தள்ளிவிட்டு செல்லிடப்பேசியை பறிக்க முயன்றுள்ளார்.
இதுகுறித்து வட்டாட்சியர் மீனாட்சி, அபிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் ஜான்சிராணி வழக்குப்பதிவு செய்து செங்கல் சூளை உரிமையாளர் மூர்த்தியை கைது செய்தார். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரி மற்றும் சொகுசு காரைப் பறிமுதல் செய்தனர்.