தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்வதற்கான கிராமசபைக் கூட்டங்கள் வெள்ளிக்கிழமை (ஜன.11) முதல் நடத்தப்பட்டு வருவதாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆட்சியர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசின் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தில், கிராமப்புறத்தில் ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களது வாழ்வாதாரத்துக்காக விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கப்படுகின்றன.
கடந்த 2018 டிசம்பர் மாத திட்டத்துக்கான வெள்ளாடுகள் வழங்க தேர்வான கிராமங்களின் விவரம்:
போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதலூர், கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் கீழச்சிறுபொது, கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் கோவிலாங்குளம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் பெருங்குளம் ஆகியன தேர்வாகியுள்ளன.அந்தக் கிராமங்களில் பயனாளிகள் தேர்வு, கிராம அளவிலான தேர்வுக் குழு மூலம் அரசு விதிமுறைப்படி நடைபெறுகிறது. இதற்காக, சிறப்பு கிராம சபைக் கூட்டமானது வெள்ளிக்கிழமை (ஜன. 11) முதல் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் தனி அலுவலரால் நடத்தப்படுகிறது. இதில், அனைவரும் கலந்துகொண்டு மனு செய்யலாம்.
தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியல் ஜனவரி 18 ஆம் தேதி கிராம சபைக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்று வெளியிடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.