தங்கம் கடத்தி வந்தவர்கள் தப்பி ஓட்டம் இலங்கைக்கு தப்ப முயன்ற 2 பேர் கைது

இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகில் ராமேசுவரம் பகுதிக்கு தங்கத்துடன் வந்த 2 பேர் தமிழக பகுதிக்குள் தப்பியோடி விட்டனர்

இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகில் ராமேசுவரம் பகுதிக்கு தங்கத்துடன் வந்த 2 பேர் தமிழக பகுதிக்குள் தப்பியோடி விட்டனர். மேலும் அதே படகில் இலங்கை தப்பிச் செல்ல முயன்ற அண்ணன், தம்பியை இந்திய கடலோரக் காவல்படையினர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மன்னார்வளைகுடா கடலில் இலங்கையைச் சேர்ந்த பிளாஸ்டிக் படகில் 2 பேர் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் இந்திய கடலோர காவல் படையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்ததுடன் பிளாஸ்டிக் படகையும் கரைக்கு செவ்வாய்க்கிழமை இரவு கொண்டு வந்தனர். 
அவர்கள் 2 பேரிடமும் மேற்கொண்ட விசாரணையில் சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்ததும்,  இலங்கையைச் சேர்ந்த பஞ்சாலிங்கம் என்பரது மகன்களான அன்புகுமரன் (எ) சின்னத்தம்பி (38), சிவராஜன் (எ) ராஜன் (41) என்பதும், அவர்கள் மதுரை ஆனையூர் முகாமில் வசித்து வந்ததும் தெரிய வந்தது.
 மேலும்  இவர்கள் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும், மேலும் இந்த திருட்டு வழக்குகளில் இருந்து இவர்கள் 2 பேரிடமும் 300 பவுன் நகைகள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. 
அத்துடன் 2 பேரிடமிருந்து அமெரிக்கா டாலர் 100, இந்திய பணம் ரூ. 1.10 லட்சம், 2  ஜி.பி.எஸ். கருவிகள், விலை உயர்ந்த மோதிரம் மற்றும் தங்கச்சங்கிலி மற்றும் தங்கம் எடைபோடும் இயந்திரம் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனர்.
 இதனைத் தொடர்ந்து, அந்த 2 பேரிடமும் மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது இந்த பிளாஸ்டிக் படகு இலங்கை மன்னாரில் இருந்து படகோட்டி மற்றும் இரண்டு பேருடன் வந்ததாகவும், அவர்கள் பெரிய பார்சல்களுடன் வந்ததும் தெரிய வந்தது. பின்னர் அந்த இரண்டு பேரும் இறங்கி தமிழக பகுதிக்குள் தப்பி ஓடி விட்டனர். பின்னர் தங்களுடன் சேர்த்து 4 பேருடன் படகு மீண்டும் இலங்கைக்கு சென்றபோது கடலில் 2 கிலோ மீட்டர் தொலைவில் திடீரென பழுதாகி நின்றதால், படகில் இருந்த படகோட்டி மற்றும் 2  பேர் கடலில் குதித்து கரைக்கு தப்பி ஓடி விட்டனர். 
தங்களுக்கு நீச்சல் தெரியாததால் படகிலேயே இருந்து விட்டதாக சின்னதம்பியும், சிவராஜனும் தெரிவித்துள்ளனர். 
 இதைத் தொடர்ந்து பெரிய பார்சல்களுடன் தமிழக பகுதிக்குள் ஊருவிய 2 பேர், இலங்கை தப்பிச் செல்ல முயன்ற 2 பேர் மற்றும் படகோட்டி என 5 பேரை மத்திய, மாநில உளவுத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com