ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் கமுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் திங்கள்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன. பல்வேறு பணிகளுக்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கமுதி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பட்டா, இருப்பிடம், வருமானம், முதியோர் உதவித்தொகை, மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நூறு நாள் வேலை பயன்கள், திருமண உதவித்தொகை உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் அனைத்து அலுவலகங்களிலும் பணியாளர்கள் இல்லாததால் பொதுமக்கள், பயனாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். எனவே தமிழக அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு பணியாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பணிக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.