பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட பர்மா காலனி, காமராஜர் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் தொடர்ந்து கழிவுநீர் கலந்து வருவதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பரமக்குடியில் ஒருநாள் விட்டு ஒருநாள் என குடிநீர் வழங்கி வந்த நகராட்சி நிர்வாகம் வறட்சியின் காரணமாக தற்போது 3, 4 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. இதனால் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதுடன், தனியார் மூலம் விற்பனை செய்யும் குடிநீரை குடம் ஒன்றுக்கு ரூ.10-க்கு வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்தால் தற்போது நகரில் பல்வேறு இடங்களில் புதிதாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வழங்கப்படும் குடிநீர் இணைப்புகளின் போது, சரியான முறையில் பணி செய்யாததால் பர்மா காலனி, காமராஜர் நகர் உள்ளிட்ட பல இடங்களில் குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்து வருகிறது. குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், 4 தினங்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படும் குடிநீரும் கழிவுநீர் கலந்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும், சில இடங்களில் இக்குடிநீரை பயன்படுத்துவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே சுகாதாரமான குடிநீர் கிடைக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.