பரமக்குடியில் அ.காச்சான் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் 25 தனி நபர்களுக்கு வழங்கிய பட்டாக்களை ரத்து செய்யவேண்டும் என அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ளது அ.காச்சான் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரா.ராஜூ தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதன் விவரம்: காச்சான் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் விளையாட்டு மைதானம், குடிநீர் தொட்டி, குளிக்கும் பொதுத் தொட்டி, மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் அந்த இடத்தில் தனி நபர்களுக்கு பட்டா வழங்கக் கூடாது என ஏற்கெனவே ஆட்சியரிடம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்து பட்டா வழங்கக் கூடாது என ஆட்சியரும் உத்தரவிட்டுள்ளார். ஆனால், தற்போது அரசு புறம்போக்கு நிலத்தில் 25 பேருக்கு அலுவலர்கள் பட்டா வழங்கியுள்ளனர்.
அரசு புறம்போக்கு நிலத்துக்கு பட்டா பெற்றவர் கொட்டகை அமைத்துள்ளார். ஆகவே பொதுமக்கள் நலன் கருதி தனியாருக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்யவேண்டும். மேலும், அரசு கட்டடங்களுக்கு அந்த இடத்தை ஒதுக்கி வைத்து மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.