திருவாடானை தாலுகா அலுவலகத்தில் கடந்த சில நாள்களாக ஆதார் மையம் செயல்படாமல் பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆதார் மையத்தில் பொதுமக்களுக்கான ஆதார் அட்டை புதிதாக எடுப்பதற்கு புகைப்படம் கைரேகை விழித்திரை பதிவு செய்தல் மற்றும் ஆதார் அட்டையில் உள்ள குறைபாடுகளை சரி செய்வது ஆகிய பணிகளை செய்து வந்தனர். ஆனால் இந்த மையம் கடந்த சில நாள்களாக செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் திருவாடானை, சி.கே.மங்கலம், அஞ்சுகோட்டை, தொண்டி, நம்புதாலை, திருப்பாலைக்குடி, எஸ்பி பட்டணம், மங்கலக்குடி, வெள்ளையாபுரம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் சேவைகளைப் பெற முடியாமல் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து வட்டாட்சியர் கூறியதாவது: இந்த ஆதார் மையத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதால் ஒப்பந்தம் முடிந்த நிலையில் இம்மையம் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் செயல்படும் வரை ராமநாதபுரம் ஆதார் மையத்தை அணுக வேண்டும் என்றார். இதனால் பொதுமக்கள் ஆதார் அட்டை புகைப்படம் எடுப்பதற்கு, அதில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய கடந்த சில நாள்களாக அலைந்து திரிகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அந்த ஆதார் மையம் செயல்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.