கமுதி பேரூராட்சிக்குள்பட்ட 12 கடைகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவால் ஏலம் நிறுத்தப்பட்டு, ஒரு கடை மட்டும் வெள்ளிக்கிழமை 24 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடபட்டது.
கமுதி பேரூராட்சிக்குள்பட்ட பேருந்து நிலையம் தென்புறமுள்ள காலியாக உள்ள 12 தரை வாடகை கடைகளுக்கும், வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடைக்கும் கடந்த ஜூலை 5 இல், ஏலம் அறிவிக்கப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் பேருந்து நிலையத்திலுள்ள இட குத்தகையில் வாடகை செலுத்தும் குத்தகைதாரர்கள் முன்வைப்பு தொகை, வாடகை நிர்ணயம் அதிகமாக இருப்பதாக தெரிவித்து, சென்னை உயர்நீதி
மன்ற மதுரை கிளையில் இடைக்கால உத்தரவு பெற்றனர்.
இதனையடுத்து 12 கடைகளுக்கான ஏலம் ஒத்தி வைக்கப்பட்டு, ஒரு கடைக்கு மட்டும் ஏலம் பேரூராட்சி செயல் அலுவலர் ரா.இளவரசி தலைமையில் நடந்தது. இந்த கடைக்கு 3 லட்ச ரூபாய் வைப்புத் தொகை நிர்ணயிக்கப்பட்டு, 81 பேர் மொத்தம் 2 கோடியே 44 லட்ச ரூபாய் செலுத்தி, ஏலத்தில் பங்கேற்றனர். கடும் போட்டிக்கு இடையே ஒரு கடை மட்டும் 24 ஆயிரத்து 156 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
உயர்நீதி மன்ற தடை விதிப்பிலுள்ள கடைகளுக்கு மறு உத்தரவு வரும் வரையில் ஏலத்தை ஒத்தி வைப்பதாக, பேரூராட்சி செயல் அலுவலர் ரா.இளவரசி தெரிவித்தார்.