குடிமராமத்தின்போது கண்மாய்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் முற்றிலுமாக அகற்றப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை காலையில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவுள்ள விவசாயிகள், பாசனதாரர் நலச்சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகளுக்கு ஒருநாள் தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சிக்குத் தலைமை வகித்து ஆட்சியர் பேசியது: நீர்நிலைகளை பாதுகாத்து நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்திடும் வகையில் குடிமராமத்து திட்டத்தில் கண்மாய் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பில் 69 கண்மாய்களில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தற்போது பெரும்பான்மையான கண்மாய்களில் பணிகள் தொடங்குவதற்கு தயார் நிலையில் உள்ளன. புனரமைப்பு பணிகளின் போது கண்மாய் கரைகளை புனரமைத்தல், வலுப்படுத்துதல், பாசன மதகுகளை சீரமைத்தல், மழைநீர் கலுங்குகளை பழுதுபார்த்தல், வரத்துக் கால்வாய் மற்றும் வழங்கு வாய்க்கால்களை புனரமைத்தல் போன்றவை மேற்கொள்ளப்படும்.
மேலும், குடிமராமத்து திட்டத்தில் தேர்ந்தெடுத்துள்ள 69 கண்மாய்களில், சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றி தரமான முறையில் புனரமைப்பு பணிகள் நிறைவேற்றப்படவுள்ளன என்றார். பின்னர் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றுகளையும் அவர் வழங்கினார். இதையடுத்து ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், வட்டகுடி மற்றும் சம்பை கிராமங்களுக்கு சென்று குடிமராமத்து கண்மாய்களை பார்வையிட்டார்.