திருவாடானை, சின்ன கீர மங்கலம் ஆகிய பகுதிகளில் போலியாக மருத்துவமனை நடத்திய 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திருவாடானையில் போலியாக மருத்துவமனை நடத்தி மருத்துவம் பார்ப்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் தலைமையில் திருவாடானை போலீஸார் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த 3 பேர் மருத்துவம் படிக்காமல் மருத்துவமனை நடத்தி மருத்துவம் பார்ப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து திருவாடானை வடக்குத் தெருவில் மருத்துவமனை நடத்திய அலாவுதீன் மனைவி ஷகிலாபானு (60), திருவாடானை பிடாரி கோவில் தெருவில் மருத்துவமனை நடத்திய பக்ருதீன் மகன் சிராஜுதீன் (45) மற்றும் திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் மருத்துவமனை நடத்திய கருப்பணன் அம்பலம் மகன் சுவாமிநாதன் (77) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.