ராமநாதபுரம் நகரில் அறிவிக்கப்படாமல் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ராமநாதபுரம் நகரில் கடந்த சில நாள்களாகவே அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. பகல், இரவு என தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு ஒருமுறை ஒரு மணி நேரம் வரையில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. புதன்கிழமை பகலில் திடீர் திடீரென மின்தடை ஏற்பட்ட நிலையில் இரவில் நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் வீடு உள்ள வண்டிக்காரத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அதிகமாக ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இதுகுறித்து புகார் கூற மின்வாரிய அலுவலகத்தை தொலைபேசியில் பொதுமக்கள் தொடர்பு கொண்டாலும் யாரும் பதில் அளிப்பதில்லை. இதனால், இரவில் உறக்கமின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.