கமுதி அருகே தரமற்ற அரிசி விநியோகம் செய்வதாகக் கூறி நியாய விலைக் கடையை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கமுதி அருகே தோப்படைபட்டியில் 400 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பொதுமக்களின் குடும்ப அட்டைக்கு தமிழக அரசு வழங்கும் இலவச அரிசி திட்டத்தில் தலா 20 கிலோ அரிசி நியாய விலைக் கடை மூலம் வழங்கப்படுகிறது.
இந்த அரிசி சமையலுக்கு உகந்ததாக இல்லாமல், மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் இருப்பதாக பொதுமக்கள் வாங்க மறுத்து 300-க்கும் மேற்பட்டடோர் நியாய விலைக்கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கமுதி வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற வருவாய்த் துறை அதிகாரிகள் 2 தினங்களுக்குள் மாற்று அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து தோப்படைபட்டி கிராம மக்கள் கூறியதாவது:
இரண்டு நாள்களுக்குள் தரமான அரிசி வழங்காவிட்டால் வீட்டில் இருக்கும் அரிசியை சாலையில் கொட்டி கமுதி-சாயல்குடி சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
இதுகுறித்து வட்ட வழங்கல் அதிகாரி சீனிவாசன் கூறியது:
இது குறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் இந்த பிரச்னை உள்ளது. விரைவில் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.