ராமநாதபுரம் அருகே புதன்கிழமை இரவு கார் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார். மேலும் தாய், மகன் காயமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர் சிராஜூதீன். இவரது மனைவி ரஹ்மத்நிஷா (29). இவர்களது மகன் முகமதுபதீன் (5). சிராஜூதீன் வெளிநாட்டில் உள்ளார். இதனால் ரஹ்மத்நிஷா மகனுடன் பட்டுக்கோட்டையில் உள்ள செட்டித் தெருவில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஹ்மத்நிஷாவின் கணவர் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வருவதாகக் கூறியதையடுத்து பட்டுக்கோட்டையிலிருந்து காரில் ரஹ்மத்நிஷா தனது மகனுடன் புதன்கிழமை மாலை கீழக்கரைக்கு வந்து கொண்டிருந்தார். காரை பட்டுக்கோட்டை சிவக்கொல்லை பகுதியைச் சேர்ந்த ஜாவியத்பைசல் (28) ஓட்டி வந்துள்ளார். ராமநாதபுரம் ஈசிஆர் சாலையில் தனியார் பெட்ரோல் விற்பனையகம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் பாலச் சுவரில் மோதியுள்ளது. இதில் ஓட்டுநர் மற்றும் ரஹ்மத்நிஷா, அவரது மகன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தோர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே ஓட்டுநர் ஜாவியத்பைசல் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர். காயமடைந்த ரஹ்மத்நிஷா மற்றும் அவரது மகன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை ஜெகதீஸ்வரன் (53) என்பவரும், தேவிப்பட்டினம் அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் சதீஷ்குமார் (32) என்பவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.