பரமக்குடியில் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளில் இருந்து முறைகேடாக குடிநீர் திருடிய மின்மோட்டார்களை நகராட்சி ஆணையாளர் நாகராஜன் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தார்.
பரமக்குடியில் நிலவி வரும் கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் வீடுகள், வணிக நிறுவனங்கள் சிலவற்றில் மின்மோட்டார்களை பொருத்தி குடிநீரை திருடி வருவதாக புகார்கள் எழுந்தன. இதனால் ஏராளமான குடியிருப்புவாசிகள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் நாகராஜன் தலைமையில் பொறியாளர் எஸ்.வரதராஜன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கீழப்பள்ளிவாசல் தெரு, கொடிக்கால்காரர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வெள்ளிக்கிழமை சோதனை செய்தனர்.
இதில், மின்மோட்டார் பொருத்தி குடிநீர் திருடிய இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும் குடிநீர் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் நாகராஜன் கூறியது: தற்போது நிலவி வரும் வறட்சியிலும் நகர் மக்களுக்கு முறையான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்நிலையில் வீடுகளில் மின்மோட்டார் பொருத்தி குடிநீரை திருடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.