ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பள்ளிவாசல் முன் அதிமுக வேட்பாளருக்கு வரவேற்பு அளிப்பதற்காக தேர்தல் விதிமுறைகளை மீறி 117 வாகனங்களில் வந்த அதிமுக நிர்வாகிகள் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் என்.சதன்பிரபாகர் போட்டியிடுகிறார். இந்நிலையில் சென்னையிலிருந்து தொகுதிக்கு வந்த அவரை வரவேற்க பார்த்திபனூர் பள்ளிவாசல் முன் அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஏ.பாதுஷா, ஒன்றியச் செயலாளர் கே.முத்தையா, தங்கவேல், நகரச் செயலாளர் பூவேந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 117 வாகனங்களில் வந்திருந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பார்த்திபனூர் காவல் நிலையத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர் சேவகப்பெருமாள்அளித்தப் புகாரின் பேரில், போலீஸார் அக்கட்சியின் நிர்வாகிகள் எஸ்.ஏ.பாதுஷா, கே.முத்தையா, தங்கவேல், பூவேந்தன், பரமக்குடி நகர் செயலாளர் எஸ்.வி.காணேசன், எம்.வடமலையான், முருகன், கே.மாலிக், முருகேசன், கார்மேகம் ஆகிய 10 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.