திருவாடானை அருகே திருவெற்றியூர் முதல் கடுக்களூர் வரையிலான சாலை சேதம் அடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவாடானை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் புதுப்பட்டினத்தில் இருந்து பிரிந்து கடுக்களூர் வழியாக திருவெற்றியூருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. இதில் கடுக்களூரிலிருந்து திருவெற்றியூர் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்டல் சாலையாக இருந்தது.
பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதால், இச்சாலை தற்போது கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. பலமுறை அளிக்கப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு முன்பு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டதுடன் கிடப்பில் போடப்பட்டதால், அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே இச்சாலையை விரைவில் சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.