ராமநாதபுரம் ரஜினி மன்றத்தின் முன்னாள் செயலரை 10 பேர் கொண்ட கும்பல் வீடுபுகுந்து அரிவாளால் வெட்டியது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் புதன்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மதுரை சொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பாலநமசிவாயம். இவர் ராமநாதபுரம் ரஜினி மன்றத்தின் முன்னாள் செயலர். இவருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் பொசுக்குடியைச் சேர்ந்த போஸ் என்பவருக்கும், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இது குறித்து பரமக்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் உள்ளது. இந்நிலையில், சொக்கிகுளம் வீட்டில் இருந்த பாலநமசிவாயத்தை, புதன்கிழமை காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி விட்டு தப்பியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து பாலநமசிவாயம் அளித்த புகாரில், போஸ் தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும், தற்போது கூலிப்படையை கொண்டு தன்னை கொலை செய்ய முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன்பேரில் தல்லாகுளம் போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்து 10 பேரைத் தேடி வருகின்றனர்.