தேவகோட்டையில் கோயில் மாடுகளை திருடிய இளைஞரை கைது செய்த போலீஸார், திருட்டுக்குப் பயன்படுத்திய சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர்.
தேவகோட்டை அருகேயுள்ள தாழையூர் கூத்தாடி முத்துபெரியநாயகி அம்மன் கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன், இக்கோயிலுக்கு மாடுகளை வாங்கி விடுவது வழக்கம்.
அவ்வகையில், தற்போது இக்கோயிலில் 2,500-க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. இந்த மாடுகளை பராமரிக்க கோசாலை அமைக்கப்பட்டது. ஆனால், கோசாலையையும் பராமரிக்காமல் விடப்பட்டதால், சுற்று வட்டாரத்திலுள்ள விவசாய நிலங்களுக்குள் மாடுகள் புகுந்து மேய்வதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
கோயில் மாடுகள் ஊருக்குள் ஆங்காங்கே திரிவதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட திருடர்கள், ஒவ்வொரு மாடுகளாக திருடிச் செல்வதாக கிராமத்தினர் கடந்த 2 ஆம் தேதி தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இதனடிப்படையில், தேவகோட்டை ஏ.எஸ்.பி. ஆர். கிருஷ்ணராஜ் உத்தரவின்படி, தாலுகா ஆய்வாளர் பிளவர் சீலா, சார்பு-ஆய்வாளர்கள் மீனாட்சி சுந்தரம், நந்தகுமார் மற்றும் போலீஸார் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தினர். அதில், தேவகோட்டை சிறுவாச்சி அருகில் உள்ள மேலப்புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த அழகப்பன் என்பவரின் மகன் செல்வம் (34), சரக்கு வாகனத்தில் இரண்டு மாடுகளை ஏற்றிக் கொண்டு சென்றபோது பிடிபட்டார்.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து செல்வத்தை கைது செய்து, கடத்தலுக்குப் பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.